அருவாகி உருவாகி அனைத்துமாய் நின்றபிரான் மருவாரும் குழலுமையாள் மணவாளன் மகிழ்ந்தருளும் திருவாரூர்ப் பிறந்தார்கள் திருத்தொண்டு தெரிந்துரைக்க ஒருவாயால் சிறியேனால் உரைக்கலாந் தகைமையதோ.
| [ 1]
|
அருவாயும், எல்லாப் பொருள்களுமாயும் விளங்கு கின்ற பெருமானாரும், மணம் பொருந்திய கூந்தலையுடைய உமை யம்மையாரின் கணவனாருமான, இறைவர், மகிழ்ந்து வீற்றிருக்கும் திருவாரூரில் பிறந்தவர்களின் திருத்தொண்டைச் சிறியேனால் ஒருவாயால் ஆராய்ந்து உரைக்க இயலும் தன்மைய தாகுமோ? ஆகாது! என்பதாம். *** 'ஒரு நாவுக்குரை செய்ய ஒண்ணாமை உணராதேன்' என ஆசிரியர் முன்னர்க் கூறியதையும் (தி. 12 பு. 21) நினைவு கூர்க. இப்பாட்டு, பல ஏடுகளில் இல்லை என்பார் சிவக்கவிமணியார். | |
திருக்கயிலை வீற்றிருந்த சிவபெருமான் திருக்கணத்தார் பெருக்கியசீர்த் திருவாரூர்ப் பிறந்தார்கள் ஆதலினால் தருக்கியஐம் பொறியடக்கி மற்றவர்தந் தாள் வணங்கி ஒருக்கியநெஞ் சுடையவர்க்கே அணித்தாகும் உயர்நெறியே.
| [ 2]
|
மேன்மேலும் பெருகுதற்குரிய சிறப்பையுடைய திருவாரூரிடத்துப் பிறந்தவர்கள், திருக்கயிலையில் வீற்றிருக்கும் சிவபெருமானின் சிவகணங்களே ஆவர். எனவே, செருக்குடன் எழும் ஐம்பொறிகளையும் அடக்கி, அவர்களின் திருவடிகளை வணங்கி, ஒன்றித்த உள்ளம் உடையவர்க்கே உயர்நெறியானது அணியதாகும். *** பெருக்கிய சீர் - திருவாரூரின் சிறப்பு நாளும் பெருக நிற்பது, மேன்மேலும் வளர்தற்குரியது என்பார். 'பெருக்கிய சீர்' என்றார். திருவாரூரில் பிறந்தவர்கள் அனைவரும் சிவகணங்களா தலை, 'ஆரூரில் பிறந்தார் எல்லாம் நம் கணங்கள் ஆன பரிசு காண்பாய்' (தி. 12 பு. 27 பா. 27) எனப் பெருமான் நமிநந்தியடிகளுக்கு முன் அருளியவாற்றானும் அறியலாம். தருக்கி - செருக்குற்று. பொறிகள் தருக்குற்று உயிர்களை அலைக்குமாற்றை 'மூள்வாய தொழில் பஞ்சேந்திரிய வஞ்ச முகரிகாள் முழுதும் இவ்வுலகை ஓடி நால்வாயும் நும்முடைய மம்மர் ஆணை நடத்துகின்றீர்க்கு . . . . . . அலையேன் மின்னே' (தி. 6 ப. 27 பா. 9) என ஆளுடைய அரசர் அறிவுறுத்து மாற்றானும் அறியலாம். உயர்நெறி - சிவப்பேறு. திருவாரூர்ப் பிறந்தார் புராணம் முற்றிற்று. | |